Published : 02 Apr 2022 09:43 AM
Last Updated : 02 Apr 2022 09:43 AM

அவசரநிலை பிரகடனம்: அடுத்தது என்ன? - இலங்கை நிலவரத்தின் 10 அண்மைத் தகவல்கள்

இலங்கையில் நேற்றிரவு நடந்த மக்கள் போராட்டத்தில் சேதமடைந்த போலீஸ் வாகனம்

கொழும்பு: இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.2) அதிபர் கோத்தபய ராஜபக்சே,அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், பொது அமைதியைப் பாதுகாக்கவும், அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவசர நிலையை அறிவித்துள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம்; 10 அண்மைத் தகவல்கள்: * இலங்கை முழுவதும் மக்கள் அதிபர் ராஜபக்ச பதவிவிலகக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். "ஊழலுக்கு இடமில்லை; வீட்டுக்குச் செல்லுங்கள் கோத்தபய" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* காலே, மத்தாரா, மோரதுவா ஆகிய தெற்குப் பகுதி நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இரவு, பகல் பாராமல் நடந்து வருகிறது. நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன. நேற்றிரவு அதிபர் வீட்டின் முன் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் ஒரே கோஷமாக பைத்தியக்காரரே பதவி விலகுங்கள் என்று முழங்கினர். போலீஸாரின் தடியடியில் இருவர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்நிலையில் இந்தியா அனுப்பிவைத்த 40,000 டன் டீசல் இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடைந்தது. இலங்கையில் டீசல் கையிருப்பு முற்றிலுமாக தீர்ந்த நிலையில் அங்கு வாகனப் போக்குவரத்து முடங்கி மக்களின் கோப ஆவேசத்தை இன்னும் அதிகரித்த சூழலில் தான் இந்தியா அனுப்பிய டீசல் இலங்கை சென்றடைந்துள்ளது.

* இலங்கை அதிபர் வீட்டின் முன்னால் கலவரம் வெடித்தபோது அதிபரும், அவரது மனைவியும் வீட்டில் தான் இருந்தனர் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா கூறியுள்ளதோடு போராட்டம் மட்டுமே நடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று நடந்த கலவரம் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

* இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் தீவிரவாத சதி இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகாமா தெரிவித்துள்ளார்.

* அதிபர் கோத்தபய ராஜபக்சே அலுவலகமானது, மத்தியக் கிழக்கு நாடுகளில் நடந்த அரபு எழுச்சியை இங்கு நிகழ்த்த மக்கள் முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. அரபு எழுச்சி (Arab Spring) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் தான் முதலில் வெடித்தது.

* வரலாறு காணாத பணவீக்கம்: இலங்கையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பணவீக்கம் 18.7% என்றளவில் உள்ளது. இது தொடர்ந்து 6வது மாதம் ஏற்பட்ட அதிகரிப்பாகும். உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களில் 30.1% அதிகரித்துள்ளது.

* இலங்கையில் அந்நியச் செலாவணி கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர் இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். இதனால் கடந்த மார்ச் 2020 முதலே இலங்கை இறக்குமதிக்கு கடும் கெடுபிடிகள் விதித்தது.

* 10 அல்ல 15 மணி நேர மின்வெட்டு: இந்த வாரத் துவக்கத்தில் இலங்கையில் 10 மனி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் அது வியாழனன்று 13 மணி நேரமாகவும், நேற்று வெள்ளிக்கிழமை 15 மணி நேர மின்வெட்டாகவும் அதிகரித்துள்ளது.

* மின் வெட்டு, மருந்துகள் தட்டுப்பாட்டால் இலங்கையில் பல்வேறு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் கூட தடைப்பட்டுள்ளன.

* இந்நிலையில், எப்படியாவது மீண்டெழ சர்வதேச நிதியத்தை (ஐஎம்எஃப்) நம்பியுள்ளது இலங்கை. மற்றும் இந்தியா, சீனாவிடமும் உதவிகளைக் கோரி வருகிறது.

அடுத்தது என்ன? அச்சத்தில் மக்கள்.. இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதற்கு பத்திரிகையாளர்களும், பொது மக்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு பெரிய ஆபத்தோ, அச்சுறுத்தலோ இல்லை பெரிய பேரிடரோ நிகழும் போதுதான் இந்த மாதிரியான அவசர நிலை பிரகடனப்படுத்துவது வழக்கம். கடைசியாக 2019ல் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இப்போது அமல்படுத்தியுள்ள அவசரநிலையில் மக்களை கேள்வி கேட்காமலேயே கைது செய்ய முடியும். அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். போலீஸ் மட்டுமல்ல ராணுவமும் வாரன்ட் இல்லாமலேயே மக்களைக் கைது செய்ய முடியும். இதனால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறையுமே தவிர பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படாது. இந்தச் சட்டத்தின் அடக்குமுறையை எதிர்த்து நீதிமன்றத்தைக் கூட மக்கள் நாட முடியாது. ஆனால் 14 நாட்களுக்குள் அரசு இந்த அவசர நிலை பிரகடனத்தை செல்லத்தக்கது என நிரூபிக்க வேண்டும். என்ன செய்கிறது அரசு என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x