Published : 31 Mar 2022 02:54 PM
Last Updated : 31 Mar 2022 02:54 PM

'இது நமது ராணுவத்தில் ஒரு மைல்கல்' - ஸ்பை சாட்டிலைட் சோதனை செய்த தென் கொரியா 

ஸ்பை சாட்டிலைட்டுடன் தென் கொரியா ஏவிய ராக்கெட்

சீயோல்: வழக்கமாகவே வட கொரியாவின் ஏவுகணை செய்திகளே வந்த வண்ணம் இருக்கும். ஆனால், இந்த முறை தென் கொரிய வெற்றிகரமாக திட எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டில் ஸ்பை சாட்டிலைட்டை ஏவி சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை தென் கொரிய ராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் பகுதியில் நடத்தப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்னதாக வட கொரியா ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவி பரிசோதனை செய்த நிலையில், தென் கொரியாவின் திட எரிபொருள் ராக்கெட் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து தென் கொரிய ராணுவ அமைச்சகம், "இது நமது ராணுவத்தில் ஒரு மைல்கல். அதுமட்டுமல் விண்வெளி ஆராய்ச்சிகளில் சுதந்திரமான முயற்சி. இதனால் நமது கண்காணிப்பு திறனும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.

இதுவரை தென் கொரியாவுக்கு தனியாக ஸ்பை சாட்டிலைட் எனப்படும் உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்காவின் செயற்கைக்கோள் தரவுகளையே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்த சோதனையை தென் கொரியா வெற்றியாகக் கருதுகிறது.

திரவ எரிபொருள் ராக்கெட்டுகளை ஒப்பிடும் போது திட எரிபொருள் ராக்கெட்டுகளை தயாரிப்பது எளிது. அதன் கட்டமைப்பு அதிக சிக்கல் இல்லாதது. அதேபோல், அதன் உற்பத்தி செலவும் குறைவு. அதை விண்ணில் ஏவுவதற்கான நேரமும் ஒப்பீட்டு அளவில் குறைவு. இதனாலேயே முதன்முறையாக முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் ராக்கெட் மூலம் ஸ்பை சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளதை தென் கொரியா முக்கியமானதாகக் கருதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x