படைக் குறைப்பில் ரஷ்யா ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு

படைக் குறைப்பில் ரஷ்யா ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

செர்னிஹிவ்: இருதரப்பு பேச்சுவார்த்தையில் ரஷ்யா உறுதி அளித்ததுபோல், படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்தப் போர் உலகின் பல்வேறு காரணிகளை பாதித்துள்ளது. இதனால் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன.அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது “நாங்கள் அவர்களது வாக்குறுதியை நம்புவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. நேற்று இரவுகூட ரஷ்யா இங்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியது” என்றார்.

முன்னதாக, ஒரு மாதமாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in