Published : 24 Mar 2022 05:10 PM
Last Updated : 24 Mar 2022 05:10 PM

வழக்கறிஞர் மோரீஸை மணந்தார் ஜூலியன் அசாஞ்ச்: பெல்மார்ஷ் சிறையில் நடந்த திருமணம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் - வழக்கறிஞர் ஸ்டெல்லா மோரீஸ் திருமணம், பெல்மார்ஷ் சிறையில் நடந்தது.

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச் தனது நீண்ட கால துணையான வழக்கறிஞர் ஸ்டெல்லா மோரீஸை லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

ஜூலியன் அசாஞ்ச் தனது விக்கிலீக்ஸ் தளத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் குறித்த அமெரிக்காவின் ரகசியமான ராணுவப் பதிவுகளை வெளியிட்டார். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவர் தென்கிழக்கு லண்டனில் இருக்கும் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார். அதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் பிரிட்டன் தலைநகரில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலியனின் வழக்கறிஞர் குழுவில் ஸ்டெல்லா மோரீஸ் பணியாற்ற வந்தார். 2015-ம் ஆண்டு முதல் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஈக்வடார் தூதரகத்தில் இருக்கும்போது ஜூலியன் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.

இந்த நிலையில், ஜூலியன் - மோரீஸ் இணை திருமணம் செய்துகொள்ள கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி உயர் பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் புதன்கிழமை இருவரது திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்வில் நான்கு விருந்தினர்கள், இரண்டு அதிகாரப்பூர்வ சாட்சிகள் மற்றும் இரண்டு காவலர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து சிறைக்கு வெளியே வந்த மோரீஸ், அங்கு திரண்டிருந்த ஜூலியனின் ஆதரவாளர்களின் முன்பு பேசினார். அப்போது, "என் மனம் மகிழ்ச்சியிலும் சோகத்திலும் திளைக்கிறது. நான் ஜூலியனை முழுமனதுடன் நேசிக்கிறேன். அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றவர், தனது கணவர் காவலில் இருப்பது "கொடூரமானது, மனிதாபிமானமற்றது" என்று கூறினார்.

திருமணத்தின்போது மோரீஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான விவென்னே வெஸ்ட் உட் வடிவமைத்த உடையினை உடுத்தியிருந்தார். வெஸ்ட் உட் ஜூலியனின் நாடுகடத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர். மோரீஸ் அணிந்திருந்த நீண்ட முக்காடில் வீரம், இரக்கமற்ற, சுதந்திரமான நீடித்த காதல் போன்ற வார்த்தைகளை வெஸ்ட்வுட் எம்ப்ராய்டரி செய்திருந்தார்.

ஜூலியன் - மோரீஸ் திருமண நிகழ்வில் அவர்களது இரண்டு குழந்தைகள், ஜூலியனின் தந்தை மற்றும் சகோதரர் கலந்து கொண்டனர். கடந்த மாதம், தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் ஜூலியன் தாக்கல் மனு நிராகரிக்கப்பட்டது.

ஆப்கன் மற்றும் ஈராக் போர்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை பெற, அமெரிக்க ராணுவத்தரவு தளங்களை ஹேக் செய்ய சதி செய்து உள்ளிட்ட 18 வழக்குகளை ஜூலியன் சந்தித்து வருகிறார்.

இந்த தகவல்கள் பின்னர் விக்கிலீக்சில் வெளியாயின. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் எவ்வாறு அறிவிக்கப்படாத சம்பவங்களின் மூலமாக நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றது என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தின. அதேபோல் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களில் 66,000 மக்கள் கொல்லப்பட்டதையும் படைகளால் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதையும் வெளிப்படுத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x