Published : 02 Mar 2022 08:10 AM
Last Updated : 02 Mar 2022 08:10 AM

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்

உக்ரைன் நாட்டின் இன்வான்கீ பகுதி அருகே ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்.படம்: பிடிஐ

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்தபுகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

உக்ரைன் மீது தொடர்ந்து 6-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. எல்லையோர நகரங்கள் மீது தொடர்ந்து குண்டு மழையை ரஷ்ய ராணுவம் பொழிந்து வருகிறது. பெரும்பாலான எல்லையோரப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்றுள்ளதாக உக்ரைனும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்தபுகைப்படத்தில் தெரியவந்துள்ளது.

பிரைபிர்ஸ்க் டவுன் பகுதியிலிருந்து அன்டனோவ் விமான நிலையம் வரை இந்த ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதுதவிர கூடுதலாக ராணுவ வீரர்களும், ஹெலிகாப்டர் படைகளும், தரைத்தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர் படைகளும் தெற்கு பெலாரஸ் அருகே உக்ரைன் எல்லையில் காணப்படுவதாக செயற்கைக்கோள் படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் வடக்குப் பகுதியில்ரஷ்யாவின் தரைத் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பெலாரஸ் அருகே போகோவ் விமானப்படைத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

பெலாரஸ் எல்லை அருகே கில்சிக்கா பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள மேக்ஸர் டெக்னாலஜீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x