தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடா அரசின் அவசரநிலை பிரகடனத்துக்கு கடும் எதிர்ப்பு

தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடா அரசின் அவசரநிலை பிரகடனத்துக்கு கடும் எதிர்ப்பு

Published on

ஒட்டாவா: கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் காரணமாக, கனடாவில் அவசரநிலை பிரகட னம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தஞ்சமடைந்தார். போராட்டம் தொடர்வதால் நேற்று முன்தினம் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும்என்று பிரதமர் ட்ரூடோ தெரி வித்தார்.

இதன்மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்சபட்சமாகக் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மத்திய அரசின் 3 புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது சொந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அவர் ரகசிய இடத்துக்கு சென்றார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in