Published : 09 Feb 2022 01:51 PM
Last Updated : 09 Feb 2022 01:51 PM

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவேசம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ருடோ பேசும்போது, ”கரோனா பெருந்தொற்றால் அனைவரும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம்.

கரோனா தடுப்பூசிக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, கனடா வாழ் மக்களின் அன்றாட வேலையை பாதிக்கிறது, நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. இத்தகையச் சூழலில், லாரி ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் சில ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சில தினங்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு பேசியிருக்கிறார். மேலும், தலைநகர் ஒட்டாவாவில் கூடுதல் போலீஸாரை அனுப்ப பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனுமதி வழங்கியுள்ளார்.

இஸ்லாமிய வெறுப்பு, யூத-விரோத மற்றும் பிற வெறுக்கத்தக்க கருத்துகளை ஆதரிக்கும் தீவிர வலதுசாரி நபர்களால் கனாடாவில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

லாரி ஓட்டுனர்கள் போராட்டம்

கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

கனடா அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து நுழைந்து, போர் நினைவிடங்களை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் சில தினங்கள் ரகசிய இடத்தில் இருந்து வந்தார். அங்கிருந்து கொண்டே தனது அரசு வேலைகளை ஜஸ்டின் ட்ரூடோ செய்து வந்த நிலையில், இப்போது மீண்டும் தலைநகர் திரும்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x