Published : 07 Feb 2022 01:52 PM
Last Updated : 07 Feb 2022 01:52 PM

வலுப்பெறும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்: கனடா தலைநகரில் அவசரநிலை பிரகடனம்

ஒட்டா: தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து போராடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கனடா தலைநகர் ஒட்டாவாவில் லாரிகளுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போர் நினைவிடங்களை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.

அங்கிருந்து கொண்டே தனது அரசு வேலைகளை ஜஸ்டின் ட்ரூடோ செய்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு வார காலமாக நடக்கும் லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலையை கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் , தங்கள் நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவிட வேண்டாம் என்று கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x