Published : 29 Jan 2022 09:11 AM
Last Updated : 29 Jan 2022 09:11 AM

NeoCov வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

ஜெனீவா: சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ள ‘நியோகோவ்’ என்ற வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை https://www.biorxiv.org/அறிவியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘வவ்வால்களிடம் நியோகோவ் என்ற கரோனா வைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸாகும். அதாவது, இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கக் கூடும்’ என்று ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நியோகோவ் வைரஸ் குறித்த சீன விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை, உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னாப்பிரிக்காவில் வாழும் வவ்வால்களிடம் நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸால்மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

மனிதர்களிடம் ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு விலங்குகள் தான் ஆதாரமாக இருக்கின்றன. கரோனா வைரஸ் எப்போதுமே விலங்குகளில் தான் இருந்து வருகின்றன. குறிப்பாக வவ்வால்கள். இந்நிலையில் சீனா பகிர்ந்துள்ள புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளோம். இந்தத் தகவலைப் பகிந்தமைக்காக சீனாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வுகளின் அடிப்படையில் NeoCov, கோவிட் 19 வைரஸ் போலவே மனித உடலில் ஊடுருவக் கூடியது. இந்த வைரஸ் இன்னும் ஒருமுறை உருமாறினால் அது மனிதர்களைத் தாக்கும் திறன் பெற்றுவிடுமாம். இந்த வைரஸும் 2012ல் சவுதியில் உருவான மெர்ஸ் Middle East respiratory syndrome (MERS),ஒரே தன்மையுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்ஸ் வவ்வால்களில் உருவாகி பின்னர் ஒட்டகங்களுக்குப் பரவி அதன்பின்னர் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவை ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x