Published : 24 Jan 2022 08:07 AM
Last Updated : 24 Jan 2022 08:07 AM

கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளது: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளதாக, ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:

ஐரோப்பா கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயை நோக்கிச் செல்வது தற்போதைய நிலவரத்தால் புலப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவின் 60% பேரை ஒமைக்ரான் தொற்றிவிடும். ஒமைக்ரான் அலை ஐரோப்பாவில் குறைந்தவுடன் உலகளவில் சில காலம் அமைதி நிலவும். அதற்குக் காரணம் தடுப்பூசி ஆற்றலாக இருக்கலாம் அல்லது மக்களுக்கு மந்தை தடுப்பாற்றல் உருவானதாக இருக்கலாம். அதன் பின்னர் கரோனா குறிப்பிட்ட காலத்தில் தலைதூக்கும் தொற்றாக அதன் தாக்கத்தை குறைக்கும். இந்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த வகை தொற்று தலைதூக்கலும் இருக்காது என்று நாங்கள் கணிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் தலைமை விஞ்ஞானி ஆந்தணி ஃபாசியும் இதே கருத்தைத் தெரிவித்தார்.
ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், "அமெரிக்காவில் இந்த வாரம் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. நிலைமை சீரடைகிறது. அதே நேரத்தில் இதை வைத்து மக்கள் அதீத நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. வடகிழக்குப் பகுதிகளில் தான் தொற்று குறைவு உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

ஆப்பிரிக்காவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் "ஆப்பிரிக்கக் கண்டத்தில் கடந்த வாரம் கரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 4வது அலையில் ஒமைக்ரான் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இப்போது தான் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் தகவல்களால் அதி வேகமாகப் பரவினாலும் மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான் வைரஸ் கரோனா பெருந்தொற்று முடிவுற்று பருவகால ஃப்ளூ நிலைக்கு தள்ளப்படுகிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை தேவை: இருப்பினும், இப்போதே நாம் என்டெமிக் நிலைக்கு வந்துவிட்டதாகக் கருதி அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒரு பெருந்தொற்று என்டெமிக் நிலைக்கு வருகிறது என்றால் அந்த நோயின் போக்கை நாம் கணித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடியும் என்பதே அர்த்தம். கரோனா வைரஸ் நம்மை நிறைய முறை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஹான்ஸ் க்ளூக் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் 53 நாடுகள் உள்ளன. இவற்றில் சில மத்திய ஆசிய நாடுகளும் அடங்கும். ஜனவரி 18 ஆம் தேதி கணக்கின்படி ஐரோப்பிய பிராந்தியத்தில் பதிவான புதிய தொற்றுகளில் 15% ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டவை. தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அரசாங்கங்கள் தங்களின் கவனத்தை தொற்றுப் பரவல் தடுப்பில் காட்டுவதைவிட, மருத்துவமனை தேவைகளைக் குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதைக் கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சீக்கிரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பது ஆகியனவற்றில் செலுத்த வேண்டும் என ஹான்ஸ் க்ளூக் கூறியிருக்கிறார்.

அதே வேளையில் மக்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை, கரோனாவாக இருக்கலாம் என சந்தேகித்தாலே தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஹான்ஸ் க்ளூக் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x