Published : 23 Jan 2022 01:40 PM
Last Updated : 23 Jan 2022 01:40 PM

பூஸ்டர் டோஸ்களுக்குப் பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை கரோனா தடுப்பூசி: ஃபைஸர் சிஇஓ பரிந்துரை

கரோனாவின் வெவ்வேறு உருமாற்றங்களில் இருந்தும் மக்களைக் காக்கும் வகையில் உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வரும் நிலையில் இதற்கு மாற்றாக ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவதைப் பரிசீலிக்கலாம் என ஃபைஸர் சிஇஓ ஆல்பர்ட் போர்லா பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களின் மக்களின் ஃபைஸர் இன்க் நிறுவனத்தின் ஃபைஸர் தடுப்பூசியை செலுத்துகின்றனர். உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இஸ்ரேல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறது.

இன்னும் சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியைக் குறைத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் N12 செய்தி நிறுவனத்திற்கு ஆல்பர்ட் போர்லா அளித்தப் பேட்டியில், 4, 5 மாதங்களுக்கு ஒரு கரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது இல்லை. இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மக்களும் அதைப் பின்பற்றுவர். எளிதில் நினைவில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வர். மேலும் பொது சுகாதாரப் பார்வையிலும் இதுவே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும். ஆகையால், ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகவும் போராடக் கூடிய தடுப்பூசியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

ஃபைஸர் நிறுவனம் மீள்வடிவமைக்கப்பட்ட புதிய தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்று அதை சந்தைக்குக் கொண்டுவரும் அளவில் மார்ச் மாதம் தொடங்கி தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம், மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக 90% பாதுகாப்பை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஷீபா மருத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா 4வது டோஸ் தடுப்பூசி மூன்றாவது டோஸைக் காட்டிலும் அதிகமான ஆன்ட்டிபாடிக்களை தருகிறது என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x