Published : 23 Jan 2022 06:30 AM
Last Updated : 23 Jan 2022 06:30 AM

அமெரிக்க – கனடா எல்லையில் - கடுங்குளிரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழப்பு

கனடாவின் மத்திய மானிசோடா மாகாணத்தில் உள்ளது எமர்சன்நகரம். இந்தப் பகுதி அமெரிக்கஎல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைபவர்கள் இந்தப் பகுதியை தான் பயன் படுத்துவார்கள். எனவே, இதுபோன்ற நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று அவர்களை கார் மூலமாக அமெரிக்க எல்லைக்குள் அழைத்துச் செல்வதற்காகவே சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 20-ம்தேதி எமர்சன் நகரில் அமெரிக்கஎல்லையை ஒட்டி ஒரு குழந்தையின் உடல் மற்றும் 3 சடலங்கள் இருப்ப தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு போலீஸார் வந்து சோதனை நடத்தியதில் அவர்கள் அனைவரும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது கடும் குளிரால் அவர் கள் உயிரிழந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனிடையே, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க போலீஸார் நேற்று கைது செய்தனர். இவருக்கும், உயிரி ழந்த 4 இந்தியர்களுக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பான விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளதாக அமெரிக்க போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “அமெரிக்கா – கனடா எல்லையை கடக்க முயன்ற 4 இந்தியர்கள் கடுங்குளிர் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம். கனடா – அமெரிக்க எல்லையை சட்ட விரோதமாக கடக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். அதில் பெரிய ஆபத்துகள் உள்ளன. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்துபவர்களை ஒழிக்கஅந்நாட்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x