Published : 21 Jan 2022 04:38 PM
Last Updated : 21 Jan 2022 04:38 PM

முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது , ”பிரிட்டனில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு விடுதிகள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும். பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணி செய்யலாம். முகக்கவசங்கள் இனி கட்டாயம் இல்லை. எனினும், நெரிசலான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. வரும் வியாழக்கிழமை முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தார்.

கரோனா தொற்றுக்கு எதிராக பிரிட்டன் அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 107,792 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 359 பேர் பலியாகினர்.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று உலக அளவில் மருத்துவ வல்லுநர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x