Published : 11 Jan 2022 05:00 PM
Last Updated : 11 Jan 2022 05:00 PM

உக்ரைன் மீது படை எடுக்கும் எண்ணம் இல்லை: ரஷ்யா

உக்ரைன் மீது படை எடுக்கும் எண்ணம் இல்லை என்று அமெரிக்காவிடம் ரஷ்யா தெரிவித்துள்ளது.

'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

மேலும், ஆயிரக்கணக்கான போர் வீரர்களை ரஷ்யா தனது எல்லையில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்க - ரஷ்ய வெளியுறவுத்துறை இணையமைச்சர்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உக்ரைன் தொடர்பாக எந்த இறுதிக்கட்ட முடிவும் எட்டப்படவில்லை. எனினும் உக்ரைன் மீது படை எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் நேட்டோ மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக் கூட்டமைப்புடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x