Last Updated : 16 Apr, 2016 09:54 AM

 

Published : 16 Apr 2016 09:54 AM
Last Updated : 16 Apr 2016 09:54 AM

தீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரம்: ஐ.நா.வின் மறைமுக ரத்து அதிகாரத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

தீவிரவாதிகளுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் மறைமுக ரத்து அதிகாரம் பயன்படுத்தபடுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு கடந்த 2001-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்தது. 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீதும் தடை விதிக்க வேண்டும் என இந்தியா கோரி யிருந்தது. ஆனால் பாகிஸ்தான் சார்பில் அந்த தடை விதிப்பை சீனா தடுத்து நிறுத்தியது.

அண்மையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருந்ததை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய இந்தியா, 2-வது முறையாக அதன் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்க கோரியது. ஆனால் கடைசி நேரத்தில் நிரந்தர உறுப்பினரான சீனா தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ‘தீவிரவாத செயல்களால் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் வெளிப்படையான விவாதம் நேற்று நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதீன் கலந்துகொண்டு சீனாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுக ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதை நிறுத்தி வைப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

தீவிரவாதிகள் மீது தடை விதிக்கும்படி பிற நாடுகள் வைக்கும் கோரிக்கையை கவுன் சிலின் 15 உறுப்பு நாடுகள் எப்படி ஆலோசித்து முடிவு எடுக்கின்றன என்பது தொடர்ந்து வெளிப்படுத்த படாமல் இருளிலேயே வைக்கப் பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளுமே ரத்து அதிகாரம் கொண்டவை தான். ஆனால் அதில் எந்த உறுப்பு நாடு மறைமுக ரத்து அதிகாரத்தை பயன்படுத்தியது என்பதை இதுவரை அம்பலப் படுத்தவில்லை.

ஐ.நா.வின் பொருளாதார தடை கமிட்டியானது சர்வதேச சமுதாயம் சார்பில் செயல்பட்டு நம்பிக்கையை கட்டமைக்க வேண்டுமே தவிர மறைமுக ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தண் டனையில் இருந்து தப்ப வைக்க முயற்சிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x