Last Updated : 10 Jan, 2022 12:34 PM

 

Published : 10 Jan 2022 12:34 PM
Last Updated : 10 Jan 2022 12:34 PM

கொத்துகொத்தாக பாதிப்பு | அமெரிக்காவில் கரோனா தொற்று 6 கோடியைக் கடந்தது: 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

படம் உதவி: ட்விட்டர்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தொற்றின் ஒட்டுமொத்த பாதிப்பு 6 கோடியைக் கடந்துள்ளது. 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உருவான கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்குதான் முதலிடம். முதல் அலை, 2-வது அலையில் மக்கள் கொத்துகொத்தாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் நாள்தோறும் உயிரிழந்தனர். கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்துக்கு வந்தபின் தொற்று பரவும் அளவு குறைந்தது.

ஆனால், பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி, மக்கள் முகக்கவசம், சமூக விலகல் ஆகியவற்றைத் துறந்து சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியவுடன் மீண்டும் பரவல் அதிகரித்தது. அதிலும் ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டபின் மீண்டும் கரோனா தொற்று கொத்துகொத்தாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2021 ஜனவரி வரை இதுவரை அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது என்று ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகக் கணிப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் 20 சதவீதம் பேர் அமெரிக்காவில் உள்ளனர், உயிரிழப்பில் 15 சதவீதம் அமெரிக்காவில்தான் நடந்தது.

அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.21 நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியே 62 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 8 லட்சத்து 37ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது என்று ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

கடந்த 2020 நவம்பர் 9-ம் தேதி கரோனா தொற்று ஒரு கோடியை எட்டியது. 2021, ஜனவரியில் 2 கோடியை எட்டியது. மார்ச் 24-ம் தேதி 3 கோடியைத் தொட்டது.

அதன்பின் பரவல் சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 6-ம் தேதி 4 கோடியைக் கடந்தது, டிசம்பர் 13-ம் தேதி 5 கோடியைக் கடந்தது. ஏறக்குறைய அடுத்த 28 நாட்களில் 2022 ஜனவரி 9-ம் தேதி 6 கோடியைக் கடந்தது. அதாவது 18 நாட்களில் ஒரு கோடி பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டனர். சராசரியாக தினசரி 5.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021, டிசம்பர் 1-ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அடுத்த 40 நாட்களில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x