Published : 07 Jan 2022 07:44 AM
Last Updated : 07 Jan 2022 07:44 AM

ஒமைக்ரானும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது; லேசானதாகக் கருதினால் அது தவறு: உலக சுகாதார அமைப்பு  

ஜெனீவா: உலகம் முழுவதும் உயிர்ப்பலி பதிவாவதால் இனியும் ஒமைக்ரான் வைரஸை லேசாகக் கருதுவது தவறு என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் பேசியதாவது:

உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவருகிறது. முந்தைய டெல்டா வைரஸை அடக்கி இதன் பரவல் மேலோங்கி வருகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்திவிடக்கூடாது. இதற்கு முந்தைய திரிபுகளைப் போல் ஒமைக்ரானாலும் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகிறார்கள். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், சுனாமி போல் உலகை ஒமைக்ரான் அச்சுறுத்தி மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 9.5 மில்லியன் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரம் பதிவான கரோனா தொற்றைவிட 71 சதவீதம் அதிகமாகும்.

வளர்ந்த நாடுகள் தான் காரணம்: இந்த ஆண்டின் முதல் உரையில் டெட்ரோஸ் அதோனம், தடுப்பூசி சமத்துவமின்மை குறித்துப் பேசினார். கடந்த 2021ல் உலகின் தடுப்பூசி சமத்துவமின்மை நிலவியது. இது புதிய வகை வைரஸ்கள் உருவாவதற்கு மிகவும் வசதியான, சரியான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 2002ல் உலா நாடுகள் தடுப்பூசிகளை புத்திசாலித்தனமாக வசதியற்ற நாடுகளுக்குப் பகிர வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் 2021 இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40% மக்களாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள 194 நாடுகளில் 92 நாடுகள் இந்த இலக்கை எட்டவில்லை. 36 நாடுகள் 10% மக்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்தவில்லை. இனி 2022ல் ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களாவது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

கென்யாவில் ஒரு தடுப்பூசி முகாம்

உயிர்ப்பலி, வேலையிழப்பு, பொருளாதார மந்தநிலை: தடுப்பூசி சமத்துவமின்மை மக்களைக் கொல்கிறது. அவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறது. சர்வதேச பொருளாதார மீட்சியை மட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட சில நாடுகள் பூஸ்டர் டோஸ்களை வரிசைக்கட்டி செலுத்துவதால் இந்தப் பெருந்தொற்று நிச்சயமாக முடிவுக்கு வராது.

இவ்வாறு டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x