Published : 04 Jan 2022 07:03 PM
Last Updated : 04 Jan 2022 07:03 PM

உணவுப் பற்றாக்குறை... கடுமையான கட்டுப்பாடு: சீனாவின் ஷியான் நகரில் நடப்பது என்ன?

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள் காரணமாக சீனாவின் முக்கியச் சுற்றுலா நகரமான ஷியானில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் வலைதளங்களில் சீன அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு நகரமான ஷியான் மக்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் மற்றவர்களை விட மிக மோசமாக அமைந்துவிட்டது என்று கூறலாம். கரோனா பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய 2020-ம் ஆண்டை விட அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. சீனாவின் மற்ற நகரங்களை விட ஷியானில்தான் தற்போது கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. 13 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஷியான் நகரில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் இன்றுவரை 1,600-க்கும் அதிகமானோர் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவே நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீன அரசின் ''பூஜ்ஜிய கோவிட்'' (zero COVID) கொள்கையின்படி 12 நாள் லாக் டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷியான் நகர மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களை வாங்குவதற்குக் கூட மக்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாகவும், உதவி வேண்டும் என்றும் ஷியான் மக்கள் வலைதளங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர். மேலும் மருத்துவ சேவைகளையும் எளிதாகப் பெற முடியவில்லை எனவும் அம்மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சில நாட்கள் முன் அரசின் கட்டுப்பாடுகளை மீறி உணவுப் பொருள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு நபரை சீன அதிகாரிகள் தாக்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் அந்நாட்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கை வகுக்கப்பட்டு, அதன்படி இந்த 12 நாள் லாக் டவுன் போடப்பட்டுள்ளது. 2020-ல் வூஹான் நகரில் இருந்து கரோனா பரவிய பிறகு மிகவும் கடுமையான விதிகள் நிறைந்த லாக் டவுனாக இந்த 12 நாள் கட்டுப்பாட்டை சீன மக்கள் கருதுவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகளில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாகவே இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துவிட்டதால், சீன அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஷியான் நகரில் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை அரசு நள்ளிரவில் தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்கிறது. குறிப்பாக, ஷியான் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மிங்டே 8 யிங்லி குடியிருப்பு பகுதி மக்களைப் புத்தாண்டு அன்று நள்ளிரவு கூட்டம் கூட்டமாக தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை எத்தனை பேர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அன்று நள்ளிரவு மட்டும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இருந்து 30 பேருந்துகளில் தனிமைப்படுத்தல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 1000க்கும் அதிகமாக இருக்கும் என ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த அப்பகுதி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம் என அந்நபர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x