Published : 31 Dec 2021 07:50 AM
Last Updated : 31 Dec 2021 07:50 AM
சூடானில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி மாற்றத்தால் அங்குள்ள செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் நோபிள்ஸ் குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இக்குழும நிறுவனர் முகமதுஅல்-மமூன். இக்குழுமம் ரயில்வே,கப்பல், பெட்ரோ ரசாயனம், வேளாண்துறை மற்றும் டைல்ஸ்உற்பத்தி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதில் டைல்ஸ் ஆலை ஆர்ஏகே செராமிக்என்ற பெயரில் காரி தொழிற்பேட்டையில் செயல்படுகிறது.
இங்கு 41 இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஓராண்டாகவே ஊதியம் வழங்கப்படவில்லை. அத்துடன் இவர்களது பாஸ்போர்ட்டையும் நிறுவனமே வாங்கி வைத்துள்ளது. நிறுவனத்தின் தலைமையகம் கார்டோனில் உள்ளது. இங்குஇவர்களது பாஸ்போர்ட் உள்ளதாகக் கூறப்படுகிறது. இக்குழுமத்தின் பிற நிறுவனங்களில் 21 இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் சூடானில் ராணுவ புரட்சி ஏற்பட்டு அங்குஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். தனியார் வசமிருந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.செராமிக் நிறுவனர் மத்திய கிழக்கு நாட்டுக்கு தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த ஓராண்டாக தங்களுக்குஊதியம் ஏதும் தரப்படவில்லை என்றும், உணவு விடுதியில் சாப்பாடும் சரிவர வழங்கப்படவில்லை என்றும்இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள்மாருதி ராம் தண்டபாணி, ராஜுஷெட்டி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறுமாநிலத்திலிருந்தும் பணியாளர்கள் நோபிள்ஸ் குழும நிறுவனங்களில் பணி புரிவதாகவும் தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்பாகவே ஆர்ஏகே செராமிக்ஸ் மற்றும் அல்மாசா போர்செலின் நிறுவன ஊழியர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க நிறுவனத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
சூடான் நிர்வாகத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வந்தாலும், தங்களது துயர் தீர்க்கப்படவில்லை என்று பணியாளர்கள் குறிப்பிட்டனர்.
தங்கள் பிரச்சினை தீர்க்கப்படும்வரை 1 லட்சம் சூடான் பவுண்ட் தொகையை விடுவிக்குமாறு இந்திய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT