Published : 29 Dec 2021 06:46 PM
Last Updated : 29 Dec 2021 06:46 PM

உலக அளவில் கடந்த வாரத்தில் கரோனா தொற்று 11% அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை

கோப்புப்படம்

பெர்லின்: உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட வாராந்திர அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''உலக அளவில் டிசம்பர் 20 முதல் 26-ம் தேதிவரை 49.90 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதாவது 28.40 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டனர். இது கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தைவிட 3% அதிகமாகும். ஒரு லட்சம் பேருககு 304 பேர் பாதிக்கப்பட்டனர். இது எந்த மண்டலத்திலும் இல்லாத அளவு அதிகமாகும்.

அமெரிக்காவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 14.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 39 சதவீதம் அதிகமாகும். ஒரு லட்சம் பேருக்கு 144.4 பேர் கரோனா தொற்று ஏற்பட்டது உலக அளவில் 2-வது மிகப்பெரிய தொற்று வீதமாகும். அமெரிக்காவில் மட்டும் கடந்த வாரத்தில் 34% தொற்று அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கடந்த வாரத்தில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 2.75 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நாடுகளில் டெல்டா வகை வைரஸ்தான் அதிகமாகப் பரவி இருந்தாலும், ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல பிரிட்டன், டென்மார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதன் மூலம் நோயின் தீவிரம், ஆக்சிஜன் பயன்பாடு, வென்டிலேட்டர் சிகிச்சை தேவை, தடுப்பூசி செலுத்தியபின் பாதிப்பின் தீவிரம், தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் பாதிப்பின் தீவிரம் ஆகியவற்றை அறிய இன்னும் அதிகமான தரவுகள் தேவைப்படுகின்றன.அதேசமயம், உலக அளவில் கடந்த வாரம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x