Published : 28 Dec 2021 07:33 AM
Last Updated : 28 Dec 2021 07:33 AM

வறட்சி, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு 500 டன் உணவு பொருள்: மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியது இந்தியா

மாபுடோ: உணவுப் பொருள் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு 500 டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ 'சாகர்' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி இந்திய கடற்படையின் கேசரி கப்பல் மூலம் பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏர்கெனவே மாலத்தீவு, மொரிஷியல், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சூழலில் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டில் தற்போது உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சி மற்றும்கரோனாவால் எழுந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு சாகர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 500 டன் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்திய கடற்படையின் கேசரி கப்பல் கடந்த 25-ம் தேதி மொசாம்பிக் தலைநகர் மாபுடோவைச் சென்றடைந்து உணவுப் பொருட்களை வழங்கியது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வறட்சி, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு கேசரி கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2 ரோந்து படகுகள், பாதுகாப்பு உபகரணங்களையும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியுள்ளோம்.

இதுவரை 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் மட்டுமன்றி மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளையும் விநியோகம் செய்து வருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x