Published : 24 Dec 2021 01:44 PM
Last Updated : 24 Dec 2021 01:44 PM

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியில் 231  ஊடகங்கள் மூடல்; 6,400 பத்திரிகையாளர்கள் வேலையிழப்பு 

ஊடகங்களுக்கு எதிரான தலிபான்களின் நடவடிக்கையை கண்டித்து போராடும் பெண் பத்திரிகையாளர்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 231 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 6,400 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் என தலிபான்கள் தரப்பில் அறிவித்தனர். ஆனால் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை, உயர்கல்விக் கூடங்களில் பெண்களுக்குத் தனி வகுப்பறைகள், பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்றத் தடை எனப் பல கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் ஊடகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதல்கட்டமாக 20 மாகாணங்களில் உள்ள 153 பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் தலிபான்களின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டன. இதுமட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் தலிபான் அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லையென்றால் பத்திரிகை மற்றும் மக்களின் சுதந்திரம் பறிபோகும் என எச்சரித்தனர். தொடர்ந்து ஊடகங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகைகள் மூடப்படுவதை கண்டித்து காபூலில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பதிவு செய்த பத்திரிகையாளர்கள் இருவரை கைது செய்த தலிபான்கள், அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் கூட்டாக இணைந்து ஆப்கனில் ஊடகங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து தற்போது 231 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 6,400 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஐந்து பெண் பத்திரிகையாளர்களில் நான்கு பேர் இப்போது வேலை செய்யவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானில் பத்திரிகை அழியும் அபாயத்தில் இருக்கிறது. தலிபான்களின் கீழ் தொடர்ந்து பணியாற்ற முயற்சிக்கும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கும் சிறைவாசத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்பு, பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் குறைந்தபட்சம் 10 தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் இருந்தன. இருப்பினும், தற்போது அந்த இடங்களில் உள்ளூர் ஊடகங்கள் இல்லை.

உதாரணமாக மலைப்பாங்கான வடக்கு மாகாணமான பர்வானில் மொத்தம் குறைந்தது 10 ஊடகங்கள் இருந்தன. ஆனால், தற்போது மூன்று மட்டுமே செயல்படுகின்றன.

ஹெராத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மாகாணங்களில், 51 ஊடகங்களில் 18 மட்டுமே இன்னும் இயங்குகின்றன. மத்திய காபூல் பகுதி ஒவ்வொரு இரண்டு ஊடகங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் மூடப்பட்டு விட்டன. இங்கு தான் ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக ஊடகங்கள் இயங்கி வந்தன.

ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பு இயங்கி வந்த148 ஊடகங்களில் 72 மட்டுமே தற்போதுள்ளன. இது ஊடகத்துறையில் வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் தொடக்கத்தில், 10,790 பேர் ஆப்கன் ஊடகங்களில் பணிபுரிந்தனர், அவர்களில் 8,290 ஆண்கள் மற்றும் 2,490 பெண்கள்.

இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 3,950 ஆண்கள் மற்றும் 410 பெண்கள் உட்பட 4,360 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

ஆறு மாகாணங்களில் 75 சதவீத ஆண் ஊடகவியலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஆனால் 15 நாடுகளில் 34 மாகாணங்களில் எந்த ஒரு பெண் பத்திரிக்கையாளரும் இன்னும் வேலை செய்யவில்லை. உதாரணத்திற்கு வடக்கு மாகாணமான ஜெலஸ்ஜானில் 19 ஊடகங்கள் இருந்தன. 112 பெண்களை பணியமர்த்தினாலும், இன்னும் இயங்கும் 12 ஊடகங்களில் எதிலும் ஒரு பெண் கூட பணியாற்றவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x