Last Updated : 23 Dec, 2021 04:03 PM

 

Published : 23 Dec 2021 04:03 PM
Last Updated : 23 Dec 2021 04:03 PM

உலகை ஆட்டிப்படைக்கும் ஒமைக்ரான்: அறிகுறிகள் என்னென்ன; எப்படி கண்டுபிடிக்கலாம்?

நியூயார்க்: தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் ஒமைக்ரான் அறிகுறி குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒமைக்ரான் இன்று உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் தொற்று குறித்து கண்டுபிடிப்பது பல்வேறு சிரமங்கள் உள்ளன. பெரும்பாலான ஆர்டிபிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் ஒமைக்ரானைக் கண்டறிய முடியும். ஆனால் முடிவுகள் யாரை எப்படி பாதிக்கிறது என்ற விரிவான ஆய்வுகள் இன்னமும் முடியவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் ஊகத்தின் அடிப்படையிலேயே ஒமைக்ரான் பாதிப்பை முடிவு செய்கின்றனர்.

சில அறிகுறி வேறுபாடுகள் பூர்வாங்க தரவுகளிலிருந்து வெளிவந்துள்ளன, ஆனால் அவற்றை நிபுணர்கள் உறுதிப்படுத்தவில்லை. மேலும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வெவ்வேறு வகையான தகவல்களும் வருகின்றன. எனினும் பொதுவாக டெல்டா வகை கரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் அறிகுறிகள் சற்று ஒத்து இருப்பதாக தெரிகிறது.

உதாரணமாக தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தனியார் சுகாதார காப்பீட்டாளரிடமிருந்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆதாரங்களின்படி ஒமைக்ரான் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு மக்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல், தசை வலி, குறிப்பாக குறைந்த முதுகுவலி ஆகியவற்றுடன் தொண்டை அரிப்பு அல்லது புண் ஏற்படுவது தென்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இவை அனைத்தும் டெல்டா வகை கரோனா வைரஸ் மற்றும் முதலில் உறுதி செய்யப்பட்ட அசல் கரோனா வைரஸின் அறிகுறிகளாகும். இதனை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் செவிலியர் பயிற்சியாளரான ஆஷ்லே இசட் ரிட்டர்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒமைக்ரான் சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கும் முந்தைய அசல் கரோனா பாதிப்புக்கும் இடையில் அறிகுறிகளில் ஏதேனும் வித்தியாசம் இருப்பதை கண்டறிவது சற்று கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.

‘‘ஒமைக்ரானின் அறிகுறிகள் அவற்றிலிருந்து வேறுபடுவதை விட டெல்டாவை ஒத்திருக்கும். ஒமைக்ரான் மற்றும் முந்தைய கரோனா மாறுபாடுகளுக்கு இடையே பெரிய அளவு மாற்றம் இல்லை. ஒன்றுபோல் ஒன்றாகவே தென்படுகிறது. ஏனெனில் இரண்டும் அவை அடிப்படையில் ஒத்து இருக்கின்றன. பாதிப்பும் அதையே செய்கின்றன’’ என்று டேவிட் ஜெஃபென் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ஓட்டோ ஓ.யாங் கூறியுள்ளார்.

வேறுபாடுகள் இருந்தாலும் அவை மிகவும் நுட்பமானதாக இருக்கும். ஒரு மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் ஒமைக்ரான் முந்தைய மாறுபாடு கொண்ட கரோனா வைரஸ்களை விட சுவை மற்றும் வாசனை இழப்பை குறைவாகவே ஏற்படுத்தும்.

முதலில் உறுதியான கரோனா நோயாளிகளில் 48% பேர் வாசனை இழப்பையும், 41% பேர் சுவை இழப்பையும் தெரிவித்தனர். ஆனால் நெதர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே ஒரு சிறிய ஒமைக்ரான் பாதிப்பு நடத்தப்பட்ட ஆய்வில் 23% நோயாளிகளுக்கு
சுவை இழப்பு மற்றும் 12% மட்டுமே வாசனை இழப்பும் கண்டறியப்பட்டது.

எனினும் இந்த வேறுபாடுகள் ஒமைக்ரான் அல்லது தடுப்பூசி போன்ற வேறு சில காரணிகளால் ஏற்பட்டதா என்பது தெளிவாகவில்லை. உண்மையில் பல கரோனா அறிகுறிகள் ஒரு நபரின் தடுப்பூசி நிலையைப் பொறுத்து மாறுபடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இவை ஒமைக்ரானுக்குரிய தனிப்பட்ட குணங்களாக கருத முடியாது.

கரோனா தொற்று குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, தகவல்களை தொடர்ந்து அளித்து வரும் நியூயார்க் பல்கலைக்கழக மேயர்ஸ் நர்சிங் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான மாயா என். கிளார்க்-குடாயா, தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகள் டெல்டா அல்லது அசல் கரோனா வைரஸால் தலைவலி, தொண்டை எரிச்சல் போன்றவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதே சமயம் தடுப்பூசி போடப்படாத நோயாளிகளுக்கு சைனஸ் அழுத்தம் மற்றும் சைனஸ் காரணமாக ஏற்படும் வலி,மூச்சுத் திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

டெல்டாவைப் போன்ற அறிகுறிகள் ஒமைக்ரானில் இருப்பதாக பென்சில்வேனியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்ட ஒமைக்ரான் நோயாளிகள் தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர். மிகவும் மோசமான குளிர் போன்ற பாதிப்புகள் தெரிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா மற்றும் அசல் கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பான மூச்சுத் திணறல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் சற்று அதிகம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஒமைக்ரானுக்கும் பிற வகைகளுக்கும் இடையே உள்ள மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், ஒமைக்ரான் இங்குபேஷன் என கூறப்படும் வெளியே தெரியும் நேரம் குறைவாக கொண்டிருக்கிறது. ஒரு நபரிடம் வெளிப்பட்ட பிறகு, நான்கு முதல் ஆறு நாட்களில் வெளிப்படுகிறது. அசல் கரோனாவை ஒப்பிடும்போது அறிகுறிகளை உருவாக்கி சோதனையில் உறுதிப்படுத்தி விடுகிறது.

டெல்டா மற்றும் அசல் கரோனா வைரஸை ஒப்பிட்டால் இது குறைவான காலமாகும் என நியூயார்க் மவுண்ட் சினாய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் வலீத் ஜாவைத் கூறினார். மாறுபாட்டின் பிறழ்வுகள் செல்களை இணைக்கவும் உள்ளே செல்லவும் உதவுவதால் இவ்வாறு இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் நோய்த்தொற்று டெல்டா நோய்த்தொற்றை விட லேசானவை என்று கூறப்படுவது பற்றி:

தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கிடைத்த தரவுகளின்படி, தடுப்பூசி போடப்பட்ட பிறகு ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பெரியவர்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து தொற்றுநோயின் முதல் அலையை விட 29% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க கரோனா நோயாளிகள் குறைவாகவே உள்ளனர்.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு பொருந்தாது. பெரும்பாலான தென்னாப்பிரிக்கர்கள் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்காவின் கரோனா பாதிப்பு சராசரி வயது 27 ஆகும்.

இவை இரண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை விட லேசான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு சராசரி வயது 38 ஆகும். அதேசமயம் குழந்தைகள் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், முதல் அலையுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் அலையின் போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 20% அதிகம் என்றும் தரவுகள் காட்டுகிறன.

ஒமைக்ரானில் இருந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக வேறு சில தரவுகள் கூறுகின்றன. சில நேரங்களில், ஆரம்பகால லேசான அறிகுறிகள் பின்னர் தீவிர அறிகுறிகளாக உருவாகலாம். எனவே சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு வீட்டிலேயே இருப்பது முக்கியம். இது இன்னும் ஒரு கரோனா வைரஸ், நாம் இன்னும் ஒரு தொற்றுநோயில் இருக்கிறோம் என்ற எண்ணம் மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறு ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x