பிரிட்டனில் ஒரேநாளில் 91ஆயிரம் பேருக்கு கரோனா; விரைவில் லாக்டவுன்? 

படம் உதவி | ட்விட்டர்
படம் உதவி | ட்விட்டர்
Updated on
2 min read


லண்டன்:பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 91 ஆயிரத்து 743 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் ஒமைக்ரான் பரவலை ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு முறை கண்காணித்து வருகிறோம். கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுனை அறிவிக்க தயங்கமாட்டோம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாகத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பிரிட்டனில் கடந்த வாரத்திலிருந்து 3-வது முறையாக கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் அதிகமாகச் சென்றுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதையடுத்து, சுகதாாரத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், கேபினெட் அமைச்சர்களுடன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் அரசுஎடுக்கும். மீண்டும் கடும் லாக்டவுனை அமல்படுத்த அரசு தயங்காது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்பாக கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், மக்கள் கொண்டாட்டங்களை ஒத்திவைக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்கும் முன், ஒமைக்ரான் வைரஸ் குறித்து தெளிவாக அறிந்தபின்புதான் அரசால் செயலில் இறங்க முடியும்.

நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்களைப் பாதுகாக்க, காப்பாற்ற அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம், அதற்கு ஒத்துழைக்க வேண்டும். நம்முடைய சுகாதாரத் துறையை, மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் மக்கள் காற்றோட்டான பகுதிகளில் தங்கியிருத்தல், முக்ககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் எவ்வளவு கொடியது என்பது தெரிந்து வருகிறது.

தொடர்ந்து புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். லண்டனில் மெல்ல மெல்ல மருத்துவமனையில் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களைப் பார்த்து வேதனையாக இருக்கிறது, எந்தக் காரணமாக இருந்தாலும் போகட்டும், உங்கள்குடும்பத்தினருக்காக தடுப்பூசி செலுத்துங்கள். இரு தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in