

கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை விளக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும் ஒரு புகைப்படம் மனதை உருக்குவதாக உள்ளது.
உணவு மற்றும் தண்ணீரின்றி பலவீனம் அடைந்த ஒட்டகச்சிவிங்கிகள், அருகிலுள்ள ஏறக்குறைய வறண்ட நிலையில் இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீர்த்தேக்க தண்ணீர் மாசுபடுவதை தடுக்க இவற்றின் உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் கடந்த செப்டம்பரில் இருந்து வழக்கமான மழைப்பொழிவில் 30 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது. இதனால் இப்பிராந்தியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கால்நடை மேய்ப்பவர்களும் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி தவிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து போர்-அல்கி ஒட்டகச்சிவிங்கி சரணாலயத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி கூறும்போது, “வளர்ப்பு விலங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி கிடைத்து விடுகிறது. ஆனால் வன விலங்குகளுக்கு அவ்வாறு உதவி கிடைப்பதில்லை. இதனால் அவை மிகவும் ஆபத்தில் உள்ளன” என்றார்.