வடகொரிய முன்னாள் அதிபர் நினைவு தினம்: சிரிக்க, பிறந்த நாள் கொண்டாடத் தடை

வடகொரிய முன்னாள் அதிபர் நினைவு தினம்: சிரிக்க, பிறந்த நாள் கொண்டாடத் தடை
Updated on
1 min read

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பத்து நாட்கள் வடகொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, வரும் பத்து நாட்களில் குடிமக்கள் மது அருந்தக் கூடாது, சிரிக்கக் கூடாது, மால்களுக்குச் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

பெயர் குறிப்பிடப்படாத வடகொரியவாசி ஒருவர் கூறும்போது, “துக்க காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் இறந்தாலும், நீங்கள் சத்தமாக அழக் கூடாது. துக்க தினம் முடிந்த பிறகுதான் உடலை வெளியே எடுக்க வேண்டும். துக்க காலத்திற்குள் தங்கள் பிறந்த நாளைக் கூடக் கொண்டாடக் கூடாது. மது அருந்தக் கூடாது. மீறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

கிம் ஜோங் இல் தனது 69 வயதில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். ஒவ்வொரு வருடமும் கிம் ஜோங் உன் தனது தந்தை நினைவு நாளின்போது காலையிலேயே அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கிம் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக செய்திகள் எதையும் வடகொரிய ஊடகங்கள் இதுவரை வெளியிடவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in