

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் ஏற்கெனவே கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை எளிதில் தாக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் அச்சம் நிலவி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு கரோனா பாதிப்பு 4,373 என்று இருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 8,561 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாத ஆரம்பத்தில் 7 நாள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 என்ற அளவில் இருந்த கரோனா பாதிப்பு, மாத மத்தியில் புதிய கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. ‘வரும் காலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு இரண்டு அல்லது மும்மடங்காக இருப்பதைப் பார்க்கப் போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் மண்டல மருத்துவ நிபுணர் நிக்ஸி குமேட்-மொலெட்ஸி எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே 90,000 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.