Published : 29 Nov 2021 11:12 AM
Last Updated : 29 Nov 2021 11:12 AM

சீனாவில் நாள்தோறும் 6.30 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம்; கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம்: ஆய்வில் எச்சரிக்கை

கோப்புப்படம்

பெய்ஜிங்

சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெக்கிங் கணிதப் பல்கலைக்கழகம் சீனாவின் கரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதித்தால், கரோனா தடுப்பு முறைகளைத் தளர்த்தினால், மிகப்பெரிய அளவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகபட்சமாக நாள்தோறும் 6.30 லட்சம்வரை பாதிக்கப்படலாம். நாட்டின் மருத்துவத்துறைக்குத் தாங்க முடியாத சுமை ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.

சீனா மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருவதால், சனிக்கிழமையன்று அங்கு 23 பேர் மட்டுமே புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சீனாவின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹாங் நான்ஷன் கூறுகையில், “புதிய உருமாற்ற, ஆபத்தான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது உலகத்துக்குப் பெரும் எச்சரிக்கையாகும். இந்த ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 30 உருமாற்றங்கள் நடந்துள்ளன என்பதால், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டுக்கு இது பெரும் சவாலாக இருக்கக்கூடும்.

சீனாவைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள்தொகையில் 76.8 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வேண்டும் என்பதால் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

சீனாவில் சினோவேக் தடுப்பூசி தயாரிக்கும் சினோவேக் பயோடெக் நிறுவனம் கூறுகையில், “ உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். எங்களின் சர்வதேசக் கூட்டாளி நிறுவனங்களுடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுக்கு நகர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியபின், சீனா பெரும்பாலான சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியாவுக்குச் செல்லும் விமானங்களைக் கூட நிறுத்திவிட்டதால், சீனாவில் பயிலும் இந்திய மாணவர்களும் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இதனால், 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனப் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் பெக்கிங் கணிதப் பல்கலைக்கழகம் கரோனா பரவல் குறித்து வெளியிட்ட அறிக்கையில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராக இல்லை. தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் மக்கள் சீனாவில் 21 நாட்கள் ஹோட்டலில் தனிமைக்குப் பின்புதான் வீடுகளுக்குச் செல்கிறார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று புள்ளிவிவரங்களை சீனாவோடு ஒப்பிட்டு செய்து ஆய்வு செய்கையில், தற்போது சீனா கடைப்பிடிக்கும் கடும் கட்டுப்பாடுகள் பொருத்தமானவை.

ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்தை சீனா அனுமதித்தால், மிக மோசமான பேரழிவு ஏற்படும். நாள்தோறும் 6.30 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் மருத்துவத் துறைக்கு தாங்க முடியாத அழுத்தம் ஏற்படும். ஆதலால், இப்போதுள்ள சூழலில் சீனா தனது சர்வதேச எல்லைகளைப் போக்குவரத்துக்குத் திறக்காமல் இருப்பது சிறந்தது. சர்வதேச விமானப் போக்குவரத்தையும் சில மேற்கத்திய நாடுகளுக்குத் தொடங்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

ஆதலால் சீனாவுக்கு இன்னும் சில மாதங்கள் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x