Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM
வேலை வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் சுரங்க ரயில் நிலையத்தில் நின்ற இளைஞருக்கு 3 மணி நேரத்தில் வேலை கிடைத்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹ்மூத் மாலிக் சிறுவயதிலேயே பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். லண்டனில் டாக்ஸி ஓட்டி வந்த மாலிக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இவரது மகன் ஹைதர் மாலிக் (24), மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த ஹைதர் மாலிக், அண்மையில் லண்டன் கனாரிவார்ஃப் பகுதியிலுள்ள சுரங்க ரயில்நிலையத்துக்குச் சென்றார். அங்கு வெளியில் நின்று கொண்டு எனக்கு வேலை வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த பதாகையைப் பிடித்துக் கொண்டார். மேலும் அந்தப் பலகையில் கியூஆர் கோடையும் உருவாக்கிக் கொண்டார். அதை ஸ்கேன் செய்யும்போது, ஹைதர் மாலிக்கின் விவரங்கள் அடங்கிய புரொபைல் கிடைக்கும். முதலில் அவரை சுரங்க ரயில் நிலையத்தில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் தொடர்ச்சியாக அவரது செல்போனுக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.காலை 7 மணிக்கு பதாகையுடன் நின்ற அவருக்கு அடுத்த 3 மணி நேரத்தில் வேலையே கிடைத்துவிட்டது.
இதுகுறித்து ஹைதர் மாலிக் கூறும்போது, “முதலில் இந்த திட்டம் பலிக்காது என்று நினைத்தேன். பின்னர் எனது தந்தையின் விடாமுயற்சி கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த செயலைச் செய்தேன்.சில மணி நேரங்களில் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு கனாரி வார்ஃப் குரூப்பிடமிருந்து அழைப்பு வந்தது. 3 மணிநேரத்தில் எனக்கு வேலையே கிடைத்துவிட்டது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எனக்காக உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT