Last Updated : 27 Nov, 2021 03:07 AM

 

Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடாவிட்டால் ரூ.3 லட்சம் அபராதம்

பிற நாடுகளின் அரசுகள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மக்களை கெஞ்சிக் கொண்டிருக்க, அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது ஆஸ்திரியா. வரும் பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து இது நடை முறைக்கு வருகிறது.

இத்தாலியிலும் பிரான்சிலும் டாக்டர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்குதான் தடுப்பூசி கட்டாயமாக உள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் கட்டாயப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாதான். பிப்ரவரி 1, 2022 வரைதடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் (சுமார்ரூ.3 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அரசு என்னதான் கதறினாலும், ஆஸ்திரிய மக்களில் கணிசமான வர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள். 66 % மக்கள்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுபதறக் கூடிய சதவிகிதம் இல்லையே என்பவர்களுக்கு ஒரு தகவல். ஆஸ்திரியாவில் ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பே புதிதாக யாருக்கும் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலிருந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் தினமும் 14 ஆயிரம் பேர் என்ற அளவுக்கு கரோனா பரவி வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களுக்கு பிரிட்டனில் வவுச்சர்களை அளிக்க உள்ளனர். இவற்றை பயன்படுத்தி பல உணவகங்களில் தள்ளுபடி விலையில் உணவு வாங்க முடியும். பேருந்துகளிலும் கட்டண சலுகை கிடைக்கும். ஊபர், போன்ற பல நிறுவனங்களும் தள்ளுபடி அளிக்கத் தயாராகிவிட்டன.

ரஷ்யா வேறு லெவல். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் லாட்டரி முறையில் சில எண்களை தேர்ந்தெடுத்து வாரத்துக்கு 5 பேருக்கு கார் பரிசாக வழங்குகிறது.

லண்டனில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் சிலரைக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டை அளிக்கிறார்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பிடனோ மாநிலத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இனி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 100 டாலர் கொடுக்கலாம் என்பதுதான் அது. ‘‘ஏற்கெனவே பொறுப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு எதுவும் கிடையாது. கொழுப்பெடுத்துப் போய்இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஊக்கத்தொகையா?" என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இப்போதைக்கு ஆஸ்திரியா முழுவதும் ஊரடங்கு சட்டம் நிலவுகிறது. முக்கியமாக 2 டோஸ்தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வர்கள் வீட்டுக்கு வெளியே வரக் கூடாது என்கிறது சட்டம். பள்ளிகள் இயங்குகின்றன. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதோடு வீட்டிலிருந்தே பாடங் களை கற்கும் வசதியையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கூட 7 முதல் 9 மாதங்கள் வரைதான் அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நிலவும் என்றும், அதற்கு அடுத்த 4 மாதங்களுக்குள் ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் ஆஸ்திரிய அரசு கூறுகிறது.

ஆஸ்திரிய அரசின் நடவடிக் கைகளை சர்வாதிகாரம் என்று கடுமையாக விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். எதிர்ப்பு ஊர்வல மும் அங்கு நடைபெற்றது.

ஒரு நாட்டின் மிகப் பெரும் பாலான மக்களுக்கு தடுப்பாற்றல் உருவாகிவிட்டால் அந்த வைரஸ் பரவுவது நின்றுவிடும். இந்த நிலையை ‘கூட்ட நோய்த் தடுப்பு’ (ஹெர்டு இம்யூனிடி) என்பார் கள். இதை அடையத்தான் நாடுகள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. அதற்காகக்ததான் மேற்படி சலுகைகளும் தண்டனையும். உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ் என்பவர்' ஐரோப்பாவில் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில மாதங்களிலேயே மேலும் 50 லட்சம் இறப்புகள் நேரிடும்' என்று எச்சரித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x