சொத்துகளை ஜிஹாத்துக்கு எழுதிவைத்த பின்லேடன்

சொத்துகளை ஜிஹாத்துக்கு எழுதிவைத்த பின்லேடன்
Updated on
1 min read

அல் காய்தா பயங்கரவாத கும்பலின் மறைந்த தலைவரான ஒசாமா பின் லேடன் தனது உயிலில் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஜிஹாத்துக்கு பயன்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார்.

அப்போது அந்த பங்களாவிலிருந்து 113 மிக முக்கிய ஆவணங்களை அமெரிக்க படையினர் கைப்பற்றிச் சென்றனர். அரபி மொழியிலிருந்த அந்த ஆவணங்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளன. கடந்த 2015 மே முதல் இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

அவற்றில் சில ராய்ட்டர்ஸ் மற்றும் ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆவணங்களில், ஒசாமாவின் உயில் குறிப்பு என சந்தேகப்படப்படும் ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஒசாமா, சூடானில் உள்ள தனக்குச் சொந்தமான 29 மில்லியன் டாலர் ரொக்கத்தையும் தனது நெருங்கிய உறவுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

அவர்கள் அந்த பணத்தை ஜிஹாதுக்காக ('புனித போர்') பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுதவிர்த்து குறிப்பிட்ட அளவிலான சவுதி ரியால் மற்றும் தங்கத்தை தனது தாய், மகன், மகள், அத்தை மற்றும் மாமன்மார்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in