Published : 15 Nov 2021 04:34 PM
Last Updated : 15 Nov 2021 04:34 PM

வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடுவது ஊழல்: உலக சுகாதார அமைப்பு

கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “ஏழை நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியைக் காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் அதிகமான பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. வளர்ச்சியில்லா நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் இன்னமும் கரோனா தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் நிலையில் வளர்ந்த நாடுகளில் ஆரோக்கியமான இளம் வயதினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

கரோனா தடுப்பூசி உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் விநியோகம் செய்தபின், பூஸ்டர் டோஸ்களைப் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவு செய்து கொள்ளட்டும்.

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸுக்காக சில நாடுகள் காத்திருக்கும் சூழலில், வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடுவது ஊழல்” என்று தெரிவித்துள்ளார்.

கோவாக்ஸ் திட்டம்

தேவை உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கக் கொண்டு செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்படப் பல நாடுகள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x