உலகின் முதல் கரோனா மாத்திரை: பிரிட்டன் அரசு பச்சைக் கொடி

உலகின் முதல் கரோனா மாத்திரை: பிரிட்டன் அரசு பச்சைக் கொடி
Updated on
1 min read

உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது.

உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன. ஐ.நா.வும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் கரோனாவுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.

மாத்திரையின் பெயர் மால்னுபிராவிர்:

இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மெர்க் நிறுவனத்துடன் 4 லட்சத்துக்கு 80 ஆயிரம் மாத்திரைகளை வாங்க பிரிட்டன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 2 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்ய மெர்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபைஸர், ரோச்சே ஆகிய மருந்து நிறுவனங்களும் கரோனாவுக்கு எதிராக ஆன்ட்டி வைரல் மாத்திரைகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பல புழக்கத்தில் உள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக கரோனா மாத்திரைகள் தயாரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திரையை எப்போது, யார் சாப்பிட வேண்டும்?

கோவிட் 19 தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இந்த மாத்திரையை அறிகுறி தொடங்கிய 5 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த மாத்திரையை உண்ண வேண்டும். இந்த மாத்திரையை உட்கொண்டால் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும், மருத்துவமனையின் அனுமதிக்கப்படும் அளவும் உடல் நிலை மோசமாவதும் 50% வரை குறைவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in