Published : 30 Oct 2021 07:04 PM
Last Updated : 30 Oct 2021 07:04 PM

பரவும் கரோனா: அனைவருக்கும் ஊதியத்துடன் ஒரு வாரம் விடுமுறையை அமல்படுத்தியது ரஷ்யா

ரஷ்யாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேசம் முழுவதும் ஒரு வார காலம் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அமல்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.

ரஷ்யாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 40,251 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கை.

இந்நிலையில் அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ரஷ்யாவில் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது.

ரஷ்யாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை இலவசமாகவே அரசாங்கம் வழங்கிவந்தாலும் கூட இதுவரை ரஷ்ய மக்கள் தொகையில் மொத்தம் 32.5% பேர் மட்டுமே இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொதுமக்கள் பலரும் அரசாங்கம் அளித்துள்ள கட்டாய விடுமுறையில் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருப்பதாக செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த கட்டாய விடுமுறை காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருந்து கரோனா பரவல் சங்கிலையை உடைக்க உதவுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ தான் இப்போதைக்கு தொற்றுப் பரவலின் மையமாக உள்ளது. அதனால், அங்கு அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரஷ்ய அரசாங்கம் தொற்று எண்ணிக்கையையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது. ரஷ்யாவில் இதுவரை 4.5 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x