Published : 28 Oct 2021 09:22 AM
Last Updated : 28 Oct 2021 09:22 AM

2025 வரை குறைவாக உண்ணுங்கள்: நாட்டு மக்களுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு

2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவுகிறது. கரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் கூட மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3300. வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவு மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வட கொரிய மக்களும் தற்போது நிலவும் உணவுப் பஞ்சம், வரும் குளிர் காலத்தைக் கூட கடக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கிறது. இதில், 2025 வரை எப்படி குறைவாக உண்ண உத்தரவிட்டால் எப்படி எனத் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வட கொரியாவின் சினுயிஜு நகர வாசி அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் பற்றிக் கூறுகையில், "2025 வரை அரசாங்கம் குறைவாக உணவு உண்ணச் சொல்கிரது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. வெறுமையும், அவநம்பிக்கையும் தான் உள்ளது.

இதற்கிடையே அரசாங்கம் எங்களுக்குத் தேவையான தானியங்களை நாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை. 2025 வரை இதைத் தாங்கிக் கொள்ளச் சொல்வதும், பட்டினியில் சாகச் சொல்லவதற்கு சமம்" என்றார். வெளிநாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்த அந்த நபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்திவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அரசுத் தரப்போ வட கொரியா கரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா நிலவரம்? உண்மையா?

வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்" என ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு மட்டும் 860,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

வடகொரியாவில் பொருளாதாரம் ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ளது. அணுஆயுதப் பரிசோதனைகள் அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்நிலையில் தற்போது உணவுப் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது.

1990களில் சோவியத் யூனியன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதுவரையில் சோவியத் யூனியனை இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. அந்தப் பஞ்சத்தின்போது லட்சக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்தனர். இப்போது
அப்படியொரு சவாலை மீண்டும் வடகொரியா எதிர்கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர் சர்வதேச நிபுணர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x