Last Updated : 26 Oct, 2021 04:30 PM

 

Published : 26 Oct 2021 04:30 PM
Last Updated : 26 Oct 2021 04:30 PM

தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை; பாண்லே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். சட்டப்பேரவையில் அறிவித்தபடி பாண்லே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக். 26) செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் (3.5 லட்சம் குடும்ப அட்டைகள்) 2 கிலோ சர்க்கரையும், 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி சேலைக்கு பதிலாக தலா ரூ.500, பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசுத் துறைகளில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்துவரும் தற்காலிக ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, பாண்லே (புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்) நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தற்கால ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

இதன்படி தற்போது தொகுப்பூதியம் ரூ.7,000 பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.176 ஊதியம் பெற்று வந்த தற்காலிக ஊழியர்களுக்கு, தினசரி ரூ. 430 ஆக உயர்த்தப்பட்டு, மாதம்தோறும் ரூ.13,000 உயர்த்தி வழங்கப்படும்.

5 ஆண்டுகளுக்குக் குறைவாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.176 வீதம் ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் இனி ரூ.330 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் இவர்களது மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக இருக்கும். உயர்த்தப்பட்ட இந்த ஊதியம் நவ.1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 18 ஊழியர்களும், தினக்கூலி பெறும் 247 தற்காலிக ஊழியர்களும் பயனடைவர். இதனால் பாண்லே நிறுவனத்துக்கு மாதம் சுமார் ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். மேலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.

பணியின்போது மரமணடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு, முதல் கட்டமாக 6 நபர்களுக்கு விரைவில் பணி வழங்கப்பட உள்ளது. பாண்லே நிறுவனத்துக்குப் பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.1-க்கு 5 காசுகள் விலை வித்தியாசத் தொகை தீபாவளிக்கு முன்னர் வழங்கப்படும்.

இதன் மூலம் 7,100 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். முகவர்களுக்கு ரூ.12,000 வீதம் சுமார் 100 நபர்களுக்கு ரூ.12 லட்சம் தீபாவளி முன்பணம் வழங்கப்படும். மேலும் 2020-21ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பாலுக்கு சிறப்பு விற்பனை தள்ளுபடி தொகையாக லிட்டர் ஒன்றுக்கு 2 காசுகள் வீதம் ரூ.5.40 லட்சம் தீபாவளிக்கு முன்னதாக முகவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 215 முகவர்கள் பயன்பெறுவர்.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காவலர், ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் பல இளைஞர்கள் காவலர் பணியிடம் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும்’’.

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அப்போது பிரதமரைச் சந்திக்க டெல்லி எப்போது செல்வீர்கள் என்று செய்தியாளர்கள் கெட்டதற்கு, ‘‘தலையை அசைத்தபடி செல்வோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x