Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM
சீனாவில் கரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவுகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட் டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி யில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அடுத் தடுத்து கரோனா அலைகள் உருவாகி வருகின்றன.
சீனாவில் இதுவரை 223 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது 76 சதவீத மக்களுக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. எனினும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வில்லை. சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலியாவின் எஜின் நகரில் வேகமாக பரவி வருகிறது. அங்கு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைய மூத்த அதிகாரி வூ லியாங்யூ, பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, "உள்மங்கோலியா பகுதியில் கரோனா டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து சுமார் 11 மாகா ணங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளோம்" என்று தெரி வித்தார்.
முன்னெச்சரிக்கையாக தலைநகர் பெய்ஜிங்கில் பல்வேறு பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாகாணங்களில் இருந்து பெய்ஜிங் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறாருக்கு தடுப்பூசி
சீனாவின் சினோவாக், சினோபார்ம் கரோனா தடுப்பூசிகளை சிறாருக்கு செலுத்த அந்த நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து சீனாவின் பல்வேறு மாகாணங்களில் 3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சீன பெற்றோர் மத்தியில் தயக்கம் காணப்படுகிறது. புஜியன் மாகாணம், புஜோ நகரை சேர்ந்த வாங் லு கூறும்போது, "எனது 3 வயது மகனுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பவில்லை. தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. சிறார் தடுப்பூசி விவகாரத்தில் அவசரப்பட மாட்டேன்" என்று தெரிவித்தார்.
பெரும்பாலான சீன பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர். எனினும் அரசின் கண்டிப்பான நடைமுறைகளால் சிறாருக்கான தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT