Published : 25 Oct 2021 12:07 PM
Last Updated : 25 Oct 2021 12:07 PM

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் என்னை கொல்ல நினைத்தார்: முன்னாள் புலனாய்வு அதிகாரி

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொல்ல நினைத்ததாக முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியை சேர்ந்தவர் முன்னாள் புலனாய்வு அதிகாரி அல்ஜாப்ரி . இவர் உயிருக்கு அஞ்சி தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் அவர் பேசும்போது, “ சவுதி இளவரசர் குறித்து பல தகவல்கள் எனக்கு தெரியும் என்பதால் என்னைக் கொல்ல சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டிருக்கிறார். மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷ்யாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டப் பிறகு என்னைக் கொல்லவும் சதி நடந்தது. நான் கொல்லப்பட வேண்டும் என்று சல்மான் நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் இறக்குவரை அவர் அமைதியாகமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

அல்ஜாப்ரி தான் பணியில் இருந்தபோது பொருளாதார ரீதியாக குற்றத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் இக்குற்றச்சாட்டை கூறி இருக்கிறார் என்று சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமால் வழக்கில் சிக்கிய இளவரசர்

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980 களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜிஸ் ஜமாலை திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே அமெரிக்கா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரை கவுரவப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்றொரு சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x