Published : 22 Oct 2021 11:32 AM
Last Updated : 22 Oct 2021 11:32 AM

சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ்?-  லான்சோ நகர் துண்டிப்பு; பள்ளிகள் மூடல்

பெய்ஜிங்

சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. வைரஸ் பரவியுள்ள லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுது. ஆனால், இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்தநிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிக அளவிலான பொதுமக்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான எந்த தகவலையும் சீனா வெளியிடவில்லை.

கரோனா சற்று குறைந்ததால் இயல்புநிலைக்கு திரும்பிய சீன மக்கள், மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவில் லான்சோ நகரில் தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. லான்சோ நகருக்கு மற்ற நகரங்களில் இருந்து 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x