Last Updated : 18 Mar, 2016 04:19 PM

 

Published : 18 Mar 2016 04:19 PM
Last Updated : 18 Mar 2016 04:19 PM

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் தடையைப் பொருட்படுத்தாமல் வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா மேலும் பல பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை செய்து பார்த்தது. இதையடுத்து, வட கொரியா மீது ஐ.நா. கடந்த 2-ம் தேதி கடும் பொருளாதார தடைகளை விதித்தது.

ஆனால், இந்த பொருளாதார தடைகளை வட கொரியா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. தென்கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சிக்கு எச்சரிக்கை அளிக்கும் விதத்தில் சில ஏவுகணைகளை கடலில் வீசி பரிசோதித்துப் பார்த்தது. மேலும் அமெரிக்காவின் ஹைட்ரஜன் குண்டுகளை ஏவுகணையுடன் இணைத்து வீசி மான்ஹாட்டன் நகரை அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தது வடகொரியா.

இதனிடையே மீண்டும் நடுத்தர தொலைவு பாயும் ஏவுகணைகளை வடகொரியா வீசி பரிசோதித்துப் பார்த்துள்ளது. அமெரிக்க எல்லைக்குள் அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கும் வல்லமையுடைய ஏவுகணைகளை பரிசோதிக்கும்படி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் நேற்று மீண்டும் பரிசோதித்தது. 800 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா கிழக்கு கடலோரப்பகுதியில் ஏவி பரிசோதித்ததாக தென்கொரியாவின் ராணுவ இணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஏப்ரலுக்கு பிறகு, நடுத்தர தொலைவு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துப் பார்த்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி அணு குண்டு பரிசோதனை நடத்தியதற்காகவும், கடந்த பிப்ரவரி 7-ல் ஏவுகணை பரிசோதனை நடத்தியதற்காகவும் வடகொரியா மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேலும் புதிய பொருளாதார தடைகளை விதித்து, அதற்கான செயல் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த தடைகள், வடகொரிய மக்களைக் குறிவைக்கவில்லை. அரசை இலக்காக்கி விதிக்கப்பட்டுள்ளன என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் சீனாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் பொருளாதார நண்பனாக சீனா விளங்குகிறது. அது வழக்கம்போல தனது வர்த்தக நடவடிக்கைகளை வடகொரியாவுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ல் வடகொரியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சீனா 90 சதவீதத்தை மேற்கொண்டது.

அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, “எந்தவொரு நாட்டின் தன்னிச்சையான பொருளாதார தடைகளையும் சீனா எதிர்க்கும்” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x