Published : 19 Oct 2021 09:12 AM
Last Updated : 19 Oct 2021 09:12 AM

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: ஜப்பான், தெ.கொரியா கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை அண்டை நாடான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன.

இந்தச் சோதனை குறித்து தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் கூறியதாவது:

வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது. வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்துள்ளோம் என்றார்.

கொரிய போர் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னமும் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான போக்கு ஏற்படாததால், தென் கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு இத்தகைய ஏவுகணை சோதனைகள் முட்டுக்கட்டையாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இது குறித்து கூறுகையில், "வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வட கொரியா சமீப காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவது வேதனையானது" என்று தெரிவித்துள்ளார்.

எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவம்:

அண்மையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகள் பற்றி பேசியிருந்தார். அப்போது அவர், "பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் கிம் பேசும்போது, “எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம். தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம்.

வடகொரியா அதன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x