ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள்: ஐஎஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள்: ஐஎஸ் எச்சரிக்கை
Updated on
1 min read

ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்று ஐஏஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் மசூதி ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கனில் நடத்தப்பட்ட இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவார்கள் என்று தலிபான்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில், ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி

முன்னதாக, ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருப்பதால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in