Published : 17 Oct 2021 04:16 PM
Last Updated : 17 Oct 2021 04:16 PM

கச்சா எண்ணெய் வாங்க காசில்லை: இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை

கொழும்பு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் கீழ் அமெரிக்க டாலர் நிதியுதவியை கடனாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை.
மேலும் சூறாவளி தாக்கியதால் அமெரிக்க வளைகுடா மெக்ஸிகோ பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்தன.இதனாலும் கச்சா எண் ணெய் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் 84 டாலர்களாக உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். கரோனா திப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது.
இதனால், அந்நாடு நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியிலும் அந்நாடு சிக்கியுள்ளதால் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கிறது.

இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் பியூப்பிள்ஸ் வங்கி ஆகிய இரண்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை இலங்கை அரசு கோருகிறது. இந்திய -இலங்கை பொருளாதார கூட்டாண்மை ஏற்பாட்டின் 500 மில்லியன் கீழ் அமெரிக்க டாலர் நிதியை பெறுவதற்காக இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை இந்திய அரசு உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x