Published : 15 Oct 2021 05:48 PM
Last Updated : 15 Oct 2021 05:48 PM
12 - 17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “வரும் டிசம்பர் மாதத்துக்குள்ளாக நாட்டின் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த தென் ஆப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலக்கை எட்டும் வகையில் தென் ஆப்பிரிக்காவில் 12 -17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 -17 வயதினருக்குச் செலுத்தப்படுகிறது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது டோஸ் அவர்களுக்கு தற்போது செலுத்தப் போவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT