Published : 09 Oct 2021 08:10 PM
Last Updated : 09 Oct 2021 08:10 PM

நோபல் விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்: மரியா ரெஸ்ஸா

நோபல் அமைதி விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாக மரியா ரெஸ்ஸா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ்யைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையயில், நோபல் அமைதி விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாக மரியா ரெஸ்ஸா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "எனக்குக் கிடைத்துள்ள இந்த விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த காலக்கட்டத்தில் பத்திரிகையாளராக இருப்பது மிகமிகக் கடினம். பத்திரிகையாளர்களுக்கு பல முனைகளில் இருந்தும் உதவி தேவைப்படுகிறது. இப்போது எனக்கும் டிமிட்ரி முரடோவுக்கும் விருது வழங்கப்பட்டிருப்பது ஆதிக்க மனப்பாண்மை கொண்ட அதிகாரத்தில் இருப்போருக்கு பயத்தை ஏற்படுத்தும் அட்ரினலின் ஷாட். சமூகத்தைப் பிரிக்கும் ஆட்சியாளர்கள் வேண்டும் என்று மக்கள் தேர்வு செய்வதில்லை. அதை ஆட்சியில் அமர்ந்த பின்னர் சிலர் உருவாக்கி செயல்படுத்துகின்றனர். இந்த விருது அத்தகையோருக்கு எதிரானது.

இந்த விருது என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் அச்சமின்றி தங்கள் பணியைச் செய்ய உதவுகிறது" என்று கூறியுள்ளார்.
மரியா ரெஸ்ஸாவுக்குக் கிடைத்துள்ள விருதை பிலிப்பைன்ஸ் வாழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். பிலிப்பைன்ஸ் ஊடக உரிமைக் குழுவானது, இந்த விருது ஒரு வெற்றிக் கனி எனக் கூறுகின்றனர். உலகிலேயே பிலிப்பைன்ஸ் நாடு தான் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மரியா ரெஸ்ஸா ரேப்லர் என்ற செய்தி இணையதளத்தின் துணை நிறுவனர். கடந்த 2016ல் பிலிப்பைன்ஸில் டுட்டரேட் அதிபரானதில் இருந்து ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. டுட்டரேட் ரேப்லர் இணையதளத்தையும் ரெஸ்ஸாவையும் கிரிமினல் குற்ற வழக்குகளால் அடக்க முற்பட்டு வருகிறார். இந்நிலையில், நோபல் விருது 58 வயதான தனக்கும், தன்னைப் போன்றே பிலிப்பைன்ஸ் அரசால் உடல் ரீதியாக, ஆன்லைன் வாயிலாக தாக்குதலுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருக்கும் என நம்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x