

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா, தனது ஏவுகணை சோதனைகளைத் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வடகொரியா கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளைச் செய்து வருகிறது. இதனை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
“மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது” என்று ஐ.நா. கண்டித்துள்ளது.
முன்னதாக, ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வடகொரியா குற்றம் சாட்டியது.
ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் நிலவியது.
கரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா உணவுப் பஞ்சத்தையும் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.