Published : 04 Oct 2021 12:06 PM
Last Updated : 04 Oct 2021 12:06 PM

ஏவுகணை விவகாரம்; இரட்டை மனநிலையில் ஐ.நா. சபை: வடகொரியா குற்றச்சாட்டு

ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, வடகொரியா செப்டம்பர் மாதம் முதல் ஏவுகணை சோதனைகளைச் செய்து வருகிறது. வடகொரியாவின் இந்தச் செயல்பாடு அச்சம் தருவதாக உள்ளது என்று தென்கொரியாவும், ஜப்பானும் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் வடகொரியாவின் இந்தச் செயலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்தது. இதற்கு தற்போது வடகொரியா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அதிகாரி ஜோ கூறும்போது, “ஏவுகணை சோதனைகளில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலை நிலைப்பாட்டில் நடந்து கொள்கிறது. அமெரிக்காவுக்கும், அதன் கூட்டு நாடுகளுக்கும் ஒரு மாதிரியாகவும், வடகொரியாவுக்கு வேறு மாதிரியாகவும் ஐ.நா.சபை இந்த விவகாரத்தை அணுகுகிறது. இதற்கான விளைவுகளை ஐ.நா. சபை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.

''வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுகிறது. மேலும், அண்டை நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது'' என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில், ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கடுமையான மோதல் நிலவியது. இதன் காரணமாக வடகொரியாவின் மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x