Published : 04 Oct 2021 10:54 AM
Last Updated : 04 Oct 2021 10:54 AM

வெளியானது பண்டோரா பேப்பர்ஸ்: வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துகளைக் குவித்த 91 நாடுகளின் தலைவர்கள்; சச்சின் உள்பட பலரின் பெயர்கள் வெளியீடு

சச்சின் டெண்டுல்கர் | கோப்புப்படம்

லண்டன்

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது. பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன.

சூப்பர் ரிச் எனச் சொல்லப்படும் உலக அளவிலான மற்றும் இந்திய அளவிலான பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சட்டவிரோதச் சொத்துகளின் நிதி விவகாரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், பாப் பாடகர் திவா சகிரா, மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா சிஃபர் ஆகியோர் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த முறை பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்கள் வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், நிதியமைச்சர், நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜோர்டான் நாட்டின் அரசர், உக்ரைன் அதிபர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், செக் குடியரசின் பிரதமர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள், கோடீஸ்வரர்கள், பிரபலங்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், போலி நிறுவனம் உருவாக்கி அதில் சேர்த்துள்ள சொத்துகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள 956 நிறுவனங்களின் ரகசிய ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அதிகாரமிக்க 356 அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பெயர்கள், அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் இதில் சிக்கியுள்ளனர்.

பணக்கார நாடுகளால் உருவாக்கப்பட்ட நிதி ரகசிய முறையால் உலகெங்கும் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு வளைந்து ஒடிந்தது என்பதை, சமமற்ற நோக்கை இந்த விசாரணை வழங்குகிறது.

உலகளாவிய அரசியலில் எந்த அளவுக்கு ஆழமாக ரகசிய நிதி ஊடுருவி இருக்கிறது என்றும், வெளிநாடுகளில் சட்டவிரோத நிதிப் பதுக்கல், முதலீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசாங்கங்களும் உலகளாவிய அமைப்புகளும் ஏன் சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான ஆய்வுகளையும் அறிக்கை வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சச்சின் டெண்டுல்கர் தரப்பில் அவரின் வழக்கறிஞர் கூறுகையில், “வெளிநாடுகளில் சச்சின் செய்த முதலீடுகள் சட்டப்பூர்வமானவை. அவற்றுக்கு முறைப்படி வரி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x