Published : 13 Mar 2016 12:15 PM
Last Updated : 13 Mar 2016 12:15 PM

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா? - ஐரோப்பிய யூனியன், ரஷ்யா கூட்டாக ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன.

அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 2012 ஆகஸ்டில் செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு செய்து வருகிறது. செவ்வாயில் மீத்தேன் வாயு நிறைந்திருப்பதை கியூரியாசிட்டி கண்டறிந்தது.

பொதுவாக கால்நடைகளின் கழிவு, குப்பைகூளம், பூமியின் சதுப்பு நிலங்களில் இருந்து மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது. எனவே செவ்வாயில் நுண்ணுயிர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழக் கூடும் என்று நம்பப்படுகிறது.

புதிய விண்கலம்

இதுகுறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் விண்வெளி ஆய்வு நிறுவனம், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து டிஜிஓ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளன. இந்த விண்கலம் கஜகஸ்தானின் பைகானூரில் உள்ள ரஷ்ய ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும்.

அதேநேரம் ஜியாபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் ‘டிஜிஓ’ விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x