பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது: அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் கவலை

பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது: அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் கவலை
Updated on
1 min read

பாகிஸ்தான் நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. இது கவலையளிக்கிறது எனக் கூறியிருக்கிறார் அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி.

கடந்த காலங்களில் அமெரிக்காவுடன், அப்போதைய ஆப்கன் அரசும் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தது. தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கனின் குளிர் காலத்தில் தலிபான் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் தஞ்சமளிப்பது, தலிபான் தலைவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வந்தது.

இப்போது ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் வந்துவிட்ட நிலையில், இப்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜான் கெர்பி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். பயங்கரவாத தடுப்பில் எங்களின் அக்கறையை எப்போதுமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதிகள் தான் எங்களின் கவலை.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேசித் தீர்க்க விரும்புகிறோம்.

எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானின் சொந்த மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதை அந்நாடு உணர வேண்டும் என்றார்.

ஆனால், பாகிஸ்தானோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களுக்கு எதிராக தெஹ்ரிக் இ தலிபான் போன்ற அமைப்புகள் செயல்பட தூண்டிவிடப்படுகின்றன என்று கூறுகிறது.

ட்ரோன் தாக்குதல் தொடரும்:

ஆப்கானிஸ்தான் மீது ட்ரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தேவைப்பட்டால் ட்ரோன் தாக்குதல் நடத்துவது என்பது தங்களின் உரிமை என்று ஜான் கிர்பி கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in